தரவுகள் மீது மாத்திரம் தங்கியிராது, உலகத்தை மாற்றியமைக்கக்கூடிய படைப்பாற்றல் மிக்க ஒரு தலைமுறையே நமக்குத் தேவைப்படுகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் பாடசாலைகள் மத்தியில் 100 புத்தாக்க சங்கங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ஆகியோரின் தலைமையில் செப்டெம்பர் 8ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இப் புத்தாக்க சங்கங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் வகையில் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய 9 பாடசாலைகளுக்கு, பிரதமரின் கையால் புத்தாக்க நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கக்கூடிய பங்களிப்பு, பாடசாலை மட்டத்திலான புத்தாக்க வாய்ப்புகள் மற்றும் சவால்கள், புத்தாக்கச் சங்கங்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளைப் பெறுவதன் முக்கியத்துவம், மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள், புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் புத்தாக்கங்கள் மூலம் ஒரு படைப்பாற்றல் மிக்க தொழிலாளர் படையை நாட்டில் உருவாக்குதல் ஆகிய முக்கிய விடயங்கள் பற்றி இந்நிகழ்வில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
புதிய உலகில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அப்போது, நடைமுறையில் உள்ள பாரம்பரியக் கல்வி முறைக்கு அப்பாலான புதிய கல்வி முறையின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், புதிய கண்டுபிடிப்பாளரின் மதிப்பு என்பது அவர்களின் கல்வித் தகுதிகள், பெற்றிருக்கும் பட்டம், அல்லது தனதாக்கிக் கொண்டிருக்கும் காப்புரிமைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும், நிகழ்கால சமூகத்தை மேலும் சிறப்பாக மாற்றி அமைப்பதற்கு புதிய கண்டுபிடிப்பாளர் வழங்கும் பங்களிப்பே மிக முக்கியமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூகம் பற்றிய உணர்வையும், சமூகத்தின் மீதான பொறுப்புணர்வையும் கொண்ட, இரக்கமும் மனிதாபிமானமும் மிக்க புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதும், அவர்களை ஊக்குவிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் பிரதமர் தெரிவித்தார்.
"எனக்குத் தேவைப்படுவது தரவுகளைப் பற்றி அறிந்த ஒரு தலைமுறை மாத்திரம் அல்ல. அந்தத் தரவுகளின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய, ஆழ்ந்த அறிவையும் புதிய கண்ணோட்டத்தையும் கொண்டுள்ள, திரட்டப்பட்ட தரவுகளையும் வெறும் புத்தக அறிவையும் பயன்படுத்தி உலகத்தை மாற்றியமைக்கக்கூடிய மனப்பான்மையும் படைப்பாற்றலும் மிக்க ஒரு தலைமுறையே நமக்குத் தேவைப்படுகிறது. புதுவிதத்தில் சிந்தித்து, ஒரு விடயத்தை புதிய கண்ணோட்டத்தில் பார்த்து, கிடைத்திருக்கும் தரவுகள், தகவல்கள் ஆகியவற்றை தமது அறிவை முன்னிலைப்படுத்தி செயல்படத் தெரிந்த, இந்த உலகம் பற்றிய ஆர்வத்தைக் கொண்ட திறமைசாலிகளே நமக்குத் தேவைப்படுகின்றனர்" என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் பற்றியும், அப்பணியில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கும், கல்வி அமைச்சிற்கும் உள்ள பொறுப்புகள் பற்றியும் சுட்டிக்காட்டினார். அத்தோடு, இந்த நாட்டிற்கு இருக்கும் விசேடமான சொத்து, நாட்டிற்காக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதற்காக எதிர்காலத்தில் கனவு காணும் ஒரு புதிய தலைமுறையே எனக் கூறிய அமைச்சர், புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான உச்சகட்ட ஒத்துழைப்பை மாணவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் என்ற வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல். மொஹமட் நவவி, இலங்கை புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் வெரஞ்ச கருணாரத்ன உள்ளிட்ட விருந்தினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வரும் பாடசாலை மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப்பிரிவு