இரத்மலானை கந்தவளை வீதி மற்றும் வடிகாலமைப்பின் புனரமைப்புப் பணிகளை விரைவாக ஆரம்பிக்குமாறு பிரதமர் ஆலோசனை

பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கான பிரவேச வசதிகளை வழங்கும் இரத்மலானை கந்தவளை வீதி மற்றும் இருமருங்கிலுமுள்ள வடிகாலமைப்பின் புனரமைப்புப் பணிகளை விரைவாக ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பிரதமர் அவர்களின் தலைமையில் ஜூலை மாதம் 31ஆம் திகதி மேல் மாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே பிரதமர் இந்த ஆலோசனைகளை வழங்கினார்.

வீதியின் இருமருங்கிலுமுள்ள வடிகாலமைப்பில் காணப்படும் அடைப்புகள் காரணமாக மழைக்காலத்தில் வீதியும் இருமருங்கிலுமுள்ள கட்டிடங்களும் தொடர்ச்சியாக வெள்ளத்தில் மூழ்குவதுடன், இதனால் பிரதேசவாசிகள், நிறுவனங்களுக்கு வருகை தரும் சேவைப் பெறுநர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதும், வீதியைப் புனரமைப்பதன் மூலம் பாரிய பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் பல கிடைக்கப்பெறும் போதிலும், பல ஆண்டுகளாக முறையான பராமரிப்புகள் மேற்கொள்ளப்படாமையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த சட்டவிரோத நிர்மாணங்கள் கூட உருவாக்கப்பட்டு இருக்கின்றன என்பதும் இதன்போது தெரிய வந்தது.

இரத்மலானை கந்தவளை வீதியின் நீர் வடிந்தோடுதல் சரியான முறையில் இடம்பெறாமைக்குக் காரணமாக அமைந்துள்ள பிரதான காரணங்கள் சில இக்கலந்துரையாடலில் அடையாளம் காணப்பட்டதுடன், மழைநீர் வடிந்தோடத் தடையாக இருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்கள், வடிகாலமைப்பைச் சரியான முறையில் துப்புரவு செய்து பராமரிக்காமை மற்றும் தற்போது கட்டியெழுப்பப்பட்டிருக்கின்ற மதகுகள் மற்றும் பாலங்கள் தற்போதைய தேவைகளுக்குப் போதுமானதாக, பெரிதாக இல்லாமை என்பன அவற்றுள் பிரதானமானவையாகும்.

அத்தோடு, நீர் பாய்ந்தோடும் வீதி மட்டத்திற்கும் வடிகாலமைப்பின் அமைவிடத்திற்கும் இடையிலான உயரத்தின் வேறுபாடு வித்தியாசமாக இருப்பதும், அப்பிரதேசத்தின் நிலத்தடி நீர் மட்டம் தரை மேற்பரப்பளவிற்கு மிகச் சமீபமாக இருப்பதும் இந்த வெள்ளப்பெருக்கு நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், சம்பந்தப்பட்ட காணிகளின் உரிமை தொடர்பில் நிலவும் பிரச்சினைகள், வடிகாலமைப்பு மற்றும் கால்வாய்களின் பராமரிப்புப் பணிகள் உரிய நிறுவனங்களால் சரியாக அடையாளம் காணப்படாமை என்பன இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பாரிய தடையாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, குறுகிய நிறுவன ரீதியான மற்றும் கடமை எல்லைகளுக்குள் முடங்கிவிடாமல், அனைத்து அரச நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

பொதுமக்களுக்கும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தொழிற்சாலைகளுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சேவையாற்றும் வகையில் தயாரிக்கப்படும் இறுதித் திட்டத்தில் அப்பிரதேசத்தின் வெள்ளக் கட்டுப்பாடும் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் ஏற்கனவே இதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டதன் பின்னர், மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, இரத்மலானை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான சமன்மலீ குணசிங்க, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் வீதி உபகுழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தேவானந்த சுரவீர, மேல் மாகாணப் பிரதம செயலாளர், தெஹிவளை-கல்கிஸ்ஸ மேயர் உள்ளிட்ட இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெரும் எண்ணிக்கையிலான அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு