’திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் விரிவான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகம், குறு, சிறு நடுத்தர மற்றும் பெரும் அளவிலான தொழில்முயற்சியாளர்களை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் விரிவான நிவாரண வேலைத்திட்டமொன்று முன்னெடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

’திட்வா’ அனர்த்தத்தின் பின்னர் அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்கள் குறித்து பாராளுமன்றத்தில் ஜூன் 09 ஆம் திகதி எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கடல் மற்றும் நன்னீர் மீனவர்களுக்காக விசேட நிவாரணங்களை வழங்க மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முற்றாகச் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளுக்குப் பதிலாகப் புதிய படகுகளை வழங்கவும், பகுதியளவில் சேதமடைந்த படகுகளைத் திருத்திக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தகுதியுடைய மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடி வலைகளை வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திட்வாவினால் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, வருடாந்தம் 3% சலுகை வட்டி விகிதத்திலான கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டைக் கொண்ட இந்த வேலைத்திட்டம் 15 வங்கிகள் ஊடாகச் செயற்படுத்தப்படுகிறது. 2026 ஏப்ரல் 28 ஆம் திகதி வரை, 2,800 தொழில்முயற்சியாளர்களுக்கு 3,812 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலை விரைவாகச் செயற்படுத்துவதற்காக 6 மாத கால சலுகைக் காலத்துடன், அதிகபட்சம் 3 வருட மீளச் செலுத்தும் காலமும் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த தொழில் சூறாவளிக்கு முன்னரும் இயங்கிக் கொண்டிருந்தது என்பதையும், பாதிப்புக்குள்ளானது என்பதையும் உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் பரிந்துரை கட்டாயமாகும்.

இலங்கை மத்திய வங்கியின் ஆலோசனையின்படி, அனுமதிப் பெற்ற வங்கிகள் ஊடாக 2026 ஜனவரி 31 ஆம் திகதி வரை கடன் மீளச் செலுத்துதலை இடைநிறுத்தவும், தண்டனை வட்டி அறவிடப்படாமலிருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகள், உரிய அமைச்சுக்களின் சுற்றறிக்கைகள் மற்றும் அனர்த்த நிவாரண வழிகாட்டுதல்களுக்கு அமைய தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் ஊடகப் பிரிவு