பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி இராஜாங்க செயலாளர் மரியா திரிபோடி (Maria Tripodi) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செப்டெம்பர் 4 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அரசியல் கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பை அதிகரிப்பது, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் கலாசார மற்றும் கல்விப் பரிமாற்றங்களை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.
பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல் மற்றும் ஊழலற்ற ஒரு நிலையான தேசத்தை முன்னேற்றுவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இத்தாலியுடனான நீண்டகால நட்பைப் பாராட்டியும் சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்தும் பிரதம மந்திரி கருத்துத் தெரிவித்தார். இலங்கையின் அண்மைய முன்னேற்றங்களை திரிபோடி (Maria Tripodi ) பாராட்டினார்.
அத்துடன், தற்போதைய வேலைத்திட்டங்களுக்கு இத்தாலியின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் (Damiano Francovig) உள்ளிட்ட இத்தாலிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன, அதே அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் இசூரிகா கருணாரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு