டாக்காவில் உள்ள இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட் அவர்கள், மே மாதம்16 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
தூதுவர் கெய்ங்லெட்டை வரவேற்ற பிரதமர், அவரது புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த முக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
இலங்கையில் உள்ள பிலிப்பைன்ஸ் சமூகம் தொடர்பான தூதரக விடயங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டன. இது சம்பந்தமாக, வெளியுறவு அமைச்சு தொடர்புடைய விடயங்கள் குறித்த கலந்துரையாடல்களை தொடரவும், தேவையான ஆதரவை வழங்கவும் இணக்கம் தெரிவித்தது.
டாக்காவில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஜூடியன் கேபிஸ் அவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, இருதரப்பு அரசியல் விவகாரங்களுக்கான (கிழக்கு) மேலதிக செயலாளர் எஸ்.எஸ். பிரேமவர்தன மற்றும் வெளியுறவு அமைச்சின் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஆர். கீகல் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு