இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (The Ceylon Chamber of Commerce) பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 24 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

2026 அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவிருக்கின்ற "இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு (SLEIS 2026)" குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், டிஜிட்டல் மயமாக்கல், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் நாட்டின் கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், நாட்டின் எதிர்கால பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் இந்த உச்சிமாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என இலங்கை வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர, பிரதி உப தலைவர் வினோத் ஹைட்ராமணி, செயலாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷிரான் பெர்னாண்டோ, பிரதி செயலாளர் நாயகம் / பிரதம செயற்பாட்டு அதிகாரி அலிகி பெரேரா மற்றும் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவின் பிரதம பொருளாதார நிபுணர் அனகி ரொட்ரிகோ-வீரசேகர உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு